பாஜக அரசின் லட்சணத்தை படிங்க மக்களே: துண்டு பிரசுரம் கொடுக்கும் குஷ்பு
சென்னை: பாஜக அரசின் குறைகளை துண்டு பிரசுரமாக வழங்கும் பணியில் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ஈடுபட உள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதை பாஜக கொண்டாடி வருகின்றது. இந்நிலையில் பாஜக ஆட்சிக்கு வந்து செய்யாததையும், செய்தவற்றில் உள்ள குறைகளையும் சுட்டிக் காட்ட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில்,
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு சொல்லிக்கொள்ளும்படி எதையும் செய்யவில்லை. இதை மக்களுக்கு தெரிவிக்கும் பணியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார். அதன்படி பாஜக அரசின் குறைகளை துண்டு பிரசுரமாக அச்சடித்து மக்களுக்கு அளிக்க ராகுல் உத்தரவிட்டுள்ளார்.
பாஜக ஆட்சியின் குறைகளை மக்களிடம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் துண்டு பிரசுரம் வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதையொட்டி லட்சக்கணக்கில் துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது.
வரும் 19ம் தேதி அதாவது ராகுல் காந்தியின் பிறந்தநாள் அன்று துண்டு பிரசுர வினியோகம் துவங்கப்படும். அன்றைய தினம் சென்னையில் 2 இடங்களில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன், செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வினியோகிக்க உள்ளனர் என்றார்.