காங்கிரஸுக்காக அடிமட்ட அளவில் இறங்கி வேலை செய்யப் போகும் குஷ்பு
சென்னை: கட்சிக்காக அடிமட்ட அளவில் கூட இறங்கி மக்களை சந்திப்பேன் என்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திசை மாறிச் சென்ற நான் தற்போது சொந்த வீட்டுக்கு வந்துவிட்டேன். நான் ஒரு முஸ்லீம். நான் மதம் மாறிவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால் நான் இன்னும் முஸ்லீமாகவே உள்ளேன். நாம் சாதி, மதம் உள்ளிட்ட வர்ணம் எதுவும் பூசாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது காங்கிரஸால் தான் முடியும்.
நான் மும்பையில் பிறந்து வளர்ந்தேன். இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரை பார்த்து வளர்ந்தேன். கட்சிகள் என்று இருந்தால் வெற்றி, தோல்வி இருக்கத் தான் செய்யும். காங்கிரஸுக்காக நான் மாநிலத்தில் கிராமம், கிராமமாக ஏன் தெருத் தெருவாக சென்று மக்களை சந்தித்து பேசுவேன்.
அடிமட்ட அளவில் கூட இறங்கி மக்களை சந்திப்பேன். காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிப்பேன். கட்சி மேலிடத்தின் உத்தரவுபடியே நடப்பேன். அவர்கள் அனுமதி இன்றி எதையும் செய்ய மாட்டேன்.
அதிமுக ஆட்சியில் ஒரு குடும்பத்தலைவியாக நான் அவதிப்பட்டுள்ளேன். மக்கள் படும் பாட்டை புரிந்து கொண்டு அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.