ஏம்பா.. உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?- இப்பிடி கேட்டீங்களே குஷ்பு!
சென்னை: குஷ்பு அரசியல் கட்சி ஒன்றில் சேர்கிறார் என்று செய்தி வெளியிட்ட மீடியாக்களை ட்விட்டரில் 2 நாட்களுக்கு முன்பு விளாசிவிட்டு இன்று நல்ல நேரம் பார்த்து காங்கிரஸில் இணைந்துவிட்டார்.
திமுகவில் சேர்ந்து தீவிரமாக கட்சி பணியாற்றிய நடிகை குஷ்பு தான் ஒதுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து தன்னை மதிக்காத கட்சியில் இருக்க விரும்பவில்லை என திமுகவில் இருந்து வெளியேறினார்.
இதையடுத்து அவர் சினிமாவில் முழு கவனம் செலுத்தப் போவதாகக் கூறி அவ்வாறே செய்தார்.
அதிமுகவா, பாஜகவா
குஷ்பு பாஜகவில் இணையப் போகிறார். அவரை கட்சியில் சேர்க்க பாஜக மாநில தலைவர் தமிழிசை முயற்சி செய்கிறார். அதே சமயம் அதிமுகவும் குஷ்புவை தங்கள் பக்கம் இழுக்க ஆர்வமாக உள்ளது என்று செய்திகள் வெளியாகின.
விளாசல்
இந்த செய்தியை பார்த்த குஷ்பு ட்விட்டரில் வேலையில்லாதவர்கள் என்பதை நிரூபித்துவிட்டார்கள். நான் எந்த கட்சியிலும் சேரவில்லை என்று 2 நாட்களுக்கு முன்பு விளாசியிருந்தார்.
கோபம்
குஷ்பு இப்படி கொந்தளிக்கிறாரே ஒரு வேளை அரசியலில் மீண்டும் குதிக்க இஷ்டம் இல்லையோ என்னவோ என்று நினைக்கையிலே இன்று காலை ஒரு ட்வீட்டை தட்டி விட்டார்.
ட்வீட்
ஒரு முடிவு வாழ்க்கையையே மாற்றிவிடும்... கவனமாக சிந்தியுங்கள் என்று சூசகமாக இன்று காலை ட்வீட் செய்திருந்தார். குஷ்பு மனதை மாற்றிக் கொண்டுவிட்டார் போல. ஆனால் என்ன சொல்ல வருகிறார் என பலரும் யோசித்துக் கொண்டிருந்தனர்.
காங்கிரஸ்
நீங்க பாட்டுக்கு ரூம் போட்டு யோசிங்க என்று குஷ்பு விமானத்தில் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து காங்கிரஸில் சேர்ந்துவிட்டார்.
சகஜமப்பா
2 நாட்களுக்கு முன்பு அவர் அரசியல் கட்சியில் சேரப்போகிறார் என்றதற்கு திட்டிவிட்டு இன்று கமுக்கமாக காங்கிரஸில் சேர்ந்துவிட்டார். அரசியலில் இதெல்லாம் ஜகஜகமப்பா...