அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட கைக்குழந்தை மீட்பு.. பெண் கைது
சேலம் மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை பாலக்கோட்டில் மீட்கப்பட்டது
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை தர்மபுரி பாலக்கோட்டில் மீட்கப்பட்டது. கடந்திய பெண் வெண்ணிலா கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் நீர்முள்ளிக்குட்டையை அடுத்த ராஜாபட்டினத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். லாரி டிரைவரான இவருக்கு இந்து என்ற மனைவி உள்ளார். கர்ப்பவதியான இவரை பிரசவத்திற்காக கடந்த 24ம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தை திடீரென கடந்த 26ம் தேதி பிரசவ வார்டில் இருந்து மாயமானது.

பிறந்த பச்சிளம் குழந்தை காணாமல் போனதையடுத்து, அதிர்ச்சியடைந்த பெற்றோரும், உறவினர்களும், குழந்தையை மீட்டுத்தரக் கோரி போராட்டங்களை நடத்தினார்கள். மேலும், போலீசாரிடம் தந்தை வெங்கடேஷ் புகார் ஒன்றையும் அளித்தார்.
இதனையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது, 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிரசவ வார்டுக்குள் நுழைந்து குழந்தையை கடத்திச் சென்றது சிசிடிவி கேமராக்களில் பதிவாகியது தெரிய வந்தது. அடையாளம் தெரியாத அந்தப் பெண்ணை பிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், குழந்தை கடத்தப்பட்ட 4 நாட்களுக்கு பிறகு தர்மபுரி அருகே பாலக்கோட்டில் குழந்தையை மீட்டனர். குழந்தையை கடத்திய வெண்ணிலா என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications