திஹாரை திருத்திய கிரண் பேடி.. புதுச்சேரியைப் புதுப்பிப்பாரா?
புதுச்சேரி: புதுச்சேரியே கலகலத்துக் கிடக்கிறது. புதிய அமைச்சரவை எப்பப்பா பதவியேற்கும் என்று காத்திருந்த மக்களை குஷிப்படுத்த துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வந்து சேர்ந்துள்ளார்.
வந்து சேர்ந்த முதல் நாளிலிருந்தே அவர் அதிரடியாக செயல்பட்டு வரும் விதம் புதுச்சேரி மக்களை கவர்ந்திழுக்க ஆரம்பித்துள்ளதாம். மேலும் அதிகாரிகளுக்கு அவர் கிடுக்கிப்பிடி போட்டு வருவது அதிகாரிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான கிரண்பேடி புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கடந்த 29ம் தேதி பொறுப்பேற்றார். அன்றைய தினத்திலிருந்தே அவர் பிறப்பிக்கும் அதிரடி உத்தரவுகள் அனைத்தும் அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகளையும் கதி கலங்கச் செய்து வருகிறது.

கிரண் பேடி துணை நிலை ஆளுநரான பின்னர் போட்டுள்ள அதிரடி உத்தரவுகளில் சில...
- அனைத்து அரசு ஊழியர்களும் காலை 9 மணிக்கு அலுவலகத்திற்கு வந்துவிட வேண்டும்.
- மாலை 5 மணி முதல் 6 மணி வரை பொதுமக்கள், அதிகாரிகளை சந்தித்து குறைகளைக் கேட்க வேண்டும்.
- அந்த நேரத்தில் எந்தவித அலுவலக மீட்டிங்குகளும் இருக்கக் கூடாது.
- சமூகவிரோத செயல்கள், ரவுடித் தொல்லை குறித்து 1031 என்ற இலவச எண்ணில் தெரிவிக்கலாம்.
- புகார்கள் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்படும்.
- புகார் அளிப்போர் யார் என்பது ஆளுநர், தலைமை செயலர், காவல்துறை தலைவர் ஆகியோருக்கு மட்டுமே தெரியும்.
- அளிக்கும் தகவல் உண்மையாக இருந்தால் அவர்களுக்கு உரிய வெகுமதியும் அளிக்கப்படும்.
- மக்கள் தாங்கள் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் ரசீதை கேட்டுப் பெற வேண்டும்.
- ஒரு வாரத்திற்குள் வணிகர்கள் தங்களது கணக்குகளை சரியாக்கி விடுங்கள்.
- பள்ளிகளில் செயலர்கள், இயக்குநர்கள் திடீர் சோதனை நடத்துவார்கள்.
- ஆசிரியர்கள் பணியில் உள்ளனரா என்பதை கண்டறிய இச்சோதனை.
- ஊழல் செய்தால் யாராக இருந்தாலும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.
- ஒரு வாரத்திற்குள் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
- தடை செய்யப்பட்ட இடங்களை வாகனங்களை நிறுத்தினால் போக்குவரத்து போலீசார் அகற்றுவார்கள்.
- போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு சம்பவ இடத்திலேயே உடனடி அபராதம் வசூலிக்கப்படும்.
- எந்த வி.ஐ.பி.க்களுக்காகவும் போக்குவரத்து நிறுத்தப்படாது. அவர்களின் வாகனங்களில் சைரனும் இருக்காது.
- இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.
- புதுச்சேரி மக்களின் ஒவ்வொரு ரூபாயும் முறையாக செலவிடப்படும்.
- தினமும் மாலை 5 டூ 6 மணி ஆளுநர் மாளிகையில் முன் அனுமதி பெறாமல் பொதுமக்கள் புகார் கூறலாம்.
கிரண் பேடியின் அதிரடி மேலும் தொடரும் என்றே தெரிகிறது. பார்க்கலாம், திஹார் சிறையை சரி செய்தவர், புதுச்சேரியையும் புதுப் பொலிவுக்குக் கொண்டு வருவாரா என்பதை.












Click it and Unblock the Notifications