உள்ளாட்சி தேர்தல்: திமுக கூட்டணியில் இணைந்தது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி!
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த ஈ.ஆர் ஈஸ்வரன் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை திமுக கூட்டணியுடன் இணைந்து சந்திக்கிறது.
வரும் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் சட்டமன்றத் தேர்தலின் போது இருந்த கூட்டணியோடு திமுக வார்டுகளை பிரித்துக் கொண்டாலும் கடலூரில் விடுதலை சிறுத்தைகளுடன் வார்டுகளை பிரித்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
இதேபோல், சட்டமன்றத் தேர்தலின் போது மிக கடுமையாக திமுகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் விமர்சனம் செய்து வந்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தற்போது திமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளத.
முன்னதாக, சென்ற மாதம் 21ம் தேதி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் சந்தித்து கூட்டணி பற்றி பேசிவிட்டு சென்றார்.
இதனையடுத்து, நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார் ஈஸ்வரன். இந்த பேச்சுவார்த்தையின் போது உள்ளாட்சி தேர்தலில் வார்டுகளை பகிர்ந்து கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக ஈஸ்வரன் தெரிவித்தார்.