விஜயதாரணி மேல "பி.சி.ஆர் கேஸ்" போட்டா நாங்க ஜாமீன் எடுப்போம்... வக்காலத்து வாங்கும் ஈஸ்வரன்
தருமபுரி: காங்கிரஸ் கட்சியின் தமிழக மகளிரணி தலைவி விஜயதாரணி மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டால் முன் ஜாமீன் எடுத்துக்கொடுக்க நாங்கள் ரெடி என்று கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார். வரும் சட்டசபை தேர்தலில், கொங்கு மண்டலத்தில், கொ.ம.தே.க., ஆதரவு இன்றி, எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது என்றும் ஈஸ்வரன் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக, வடக்கு மண்டல ஒற்றுமை மாநாடு தர்மபுரியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேசியதாவது:
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எம்.பி., எம்.எம்.ஏ.,க்களாக இருந்துள்ளனர். மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுக்காததால், இந்த மாவட்ட மக்கள் வேலை தேடி, வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும் நிலை உள்ளது.
உயர்சிகிச்சை மையங்கள்..
அன்புமணி மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போதும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், உயர் சிகிச்சை பெறும் வகையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை கொண்டு வர அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், உயர் சிகிச்சைக்கு, பெங்களூரு, சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
விவசாயிகள் பாதிப்பு
பல்கலைக்கழகங்களை வழங்க கூடிய உயர் கல்வித்துறை அமைச்சர், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்த போதும், இங்கு பல்கலைக்கழகம் கொண்டு வரவில்லை. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மரவள்ளி கிழங்குக்கு போதிய விலையின்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதை தடுக்க, தமிழக அரசு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு சலுகை கிடைக்குமா?
ஒகேனக்கல் நீரை இந்த மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஏரி, குளங்களுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரியில் தொழில் வளம் பெருக, தொழில் நிறுவனங்கள் அமைப்போருக்கு அரசு சிறப்பு சலுகை அறிவிக்க வேண்டும்.
எங்க ஆதரவு அவசியம்
தேர்தல் அறிக்கையில் கூறியபடி, பிரதமர் மோடி தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை துவங்க நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக, பா.ஜ., தலைவர்கள், இதுகுறித்து பிரதமர் மோடியிடம் பேசி, இத்திட்டத்தை, செயல்படுத்த ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில், கொங்கு மண்டலத்தில், கொ.ம.தே.க., ஆதரவு இன்றி, எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது என்று ஒரே போடாக போட்டார்.
விஜயதாரணிக்கு முன் ஜாமீன்
விஜயதாரணிக்கும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கும் சண்டை வந்ததற்கான காரணமே ப்ளெக்ஸ்தான். ப்ளெக்ஸ் பிரச்னையால் ஒரு தேசியகட்சியிலே கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. விஜயதாரணி, குஷ்பு ஆகிய யார் மீது பி.சி.ஆர் கேசை (தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்) இளங்கோவன் போட்டாலும் நாங்க முன்ஜாமீன் வாங்குவோம்.
விஜயதாரணிக்கு முன் ஜாமீன் எடுத்துக்கொடுக்க நாங்கள் ரெடி.
ராமதாஸ்
அரசியல் சரித்திரத்தில் எந்த ஒரு கட்சித்தலைவரும் இன்னொருவருக்கு புதிய கட்சி ஆரம்பித்துக் கொடுத்ததாக சரித்திரம் கிடையாது. ஆனால், அதை ராமதாஸ் செய்துகொண்டிருக்கிறார். டம்மி கட்சியை ஆரம்பித்துவிட்டு நம்முடைய கட்சியை உடைக்கப்பார்க்கிறார். அதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.
இவ்வளவு தூரம் பேசிய ஈஸ்வரன், ஆளும் அதிமுகவையோ, எதிர்கட்சி வரிசையில் உள்ள திமுகவையோ கொஞ்சம் கூட விமர்சிக்கவில்லை. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சட்டசபை தேர்தல் நேரத்தில் யாருடனாவது கூட்டணி சேர்ந்துதானே ஆகவேண்டும் என்ற எண்ணமாக கூட இருக்கலாம்.
தலைமைக்கான தகுதி
ஈஸ்வரனுக்கு முன்னதாக பேசிய திரைப்பட இயக்குனர் விஜயகிருஷ்ணராஜ், தமிழகத்துக்கு தலைமை தாங்கக்கூடிய தகுதி கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிக்கே இருக்கிறது என்று கூறி ஆரம்பத்தியே சிக்சர் அடித்தார்.
அமெரிக்க அதிபர்,தமிழக முதல்வர்
நீங்க நினைச்சா நிச்சயம் ஒபாமா ஆகலாம்' னு என்னைப்பார்த்து ஈஸ்வரன் சொன்னார். அதற்கு நான் ஈஸ்வரனிடம், 'அப்படினா நீங்க முயற்சி பண்ணா தமிழக முதலமைச்சர் ஆகிடலாம்'னு சொன்னேன். நாம மத்தவங்க மாதிரி முதல்வர் வேட்பாளர்னு அறிவிச்சுக்கிட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி தொண்டர்களிடையே குஷியை ஏற்படுத்தி விட்டுப்போனார் விஜயகிருஷ்ணராஜ்.
விஜயதாரணிக்கு ஆதரவு ஏன்?
கொங்கு மண்டலத்தில் கவுண்டர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக புகார் உள்ளது. இதேபோல் வடமாவட்டங்களில் வன்னியர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்படுவதாக டாக்டர் ராமதாஸும் கூறிவருகிறார்.
இந்த பி.சி.ஆர். சட்டம் எனப்படும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தை நீக்க வேண்டும் என்று இவர்களது கோரிக்கை. தற்போது விஜயதாரணி மீது இந்த பிரிவின் கீழ் வழக்கு தொடர வேண்டும் என மனு கொடுக்கப்பட்டுள்ளதால் இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள கொங்கு ஈஸ்வரன் முயற்சிக்கிறார்.