நாடாளுமன்றத் தேர்தல்- முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது கொ.மு.க: 22 பேர் போட்டி

தங்களது வாக்கு வங்கி பலமாக இருப்பதாகவும், இதன் மூலம் வரும் தேர்தலில் பலமான தாக்கத்தை ஏற்படுத்தப் போவதாகவும் அது கூறியுள்ளது.
மேலும் தேசிய சமுதாய கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கத்தையும் அது உருவாக்கியுள்ளது. இதில் மொத்தம் 54 ஜாதி அமைப்புகள் இடம் பெற்றுள்ளனவாம்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தலைவரான பெஸ்ட் ராமசாமி கூறுகையில், கவுண்டர் சமுதாய வாக்குகளை மட்டுமே வைத்து வெல்ல முடியாது. எனவேதான் தேசிய சமுதாய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் கீழ் தேர்தலை சந்திப்பார்கள்.
பாஜகவுடன் கூட்டணி வைக்கவும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். தேசிய கட்சிகளுடன் மட்டுமே நாங்கள் கூட்டணி வைப்போம். பாஜக, காங்கிரஸுடன் பேச்சு நடந்துள்ளது. ஆனால் மக்கள் மத்தியில் மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே பாஜகவுடன் மட்டுமே கூட்டணி வைக்க நாங்கள் விரும்புகிறோம் என்றார் பெஸ்ட் ராமசாமி.
வேட்பாளர் பட்டியல்
செய்தியாளர்கள் சந்திப்பின்போது தனது கட்சியின் முதல் 6 வேட்பாளர்களின் பெயரை ராமசாமி வெளியிட்டார். அதன்படி பொங்கலூர் மணிகண்டன் திருப்பூரில் போட்டியிடுகிறார். கொமுக செயலாளர் காங்கேயம் தங்கவேல் ஈரோட்டிலும், கொமுக கொள்கை பரப்புச் செயலாளர் நேரு நகர் நந்து கோவையிலும், ஆர் கோவிந்தசாமி பொள்ளாச்சியிலும், பி.சரவணன் தர்மபுரியிலும், கணேச தேவர் ராமநாதபுரத்திலும் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தொகுதிகள் தவிர சேலம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, வட சென்னை, தென் சென்னை ஆகிய தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் ராமசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications