திருப்பூர் கிடைக்காவிட்டால் வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை- கொ.ம.தே.க.
சென்னை: திருப்பூர் தொகுதியை எங்களுக்கு பாஜக ஒதுக்காவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
கூட்டணி தர்மத்தை மதித்து இதுவரை நடந்து வருகிறோம். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளில் ஈரோடு, திருப்பூரை நாங்கள் கேட்டோம். மதிகவுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது.
அதனால் திருப்பூர் தொகுதியை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். கோவை தொகுதியில் போட்டியிட விரும்பிய பா.ஜ.க இப்போது திருப்பூரையும் கேட்கிறது.
இந்த ஒரு தொகுதியும் கொ.ம.தே.க.வுக்கு ஒதுக்க வில்லை என்றால் வேறு எந்த தொகுதியில் நாங்கள் போட்டியிடுவது? திருப்பூர் தொகுதியை பா.ஜ.க திடீரென கேட்பது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் தொகுதியை ஒதுக்காவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவது தவிர வேறு வழியில்லை. அப்படி ஒரு நிலை ஏற்படாது என நம்புகிறோம்.
ஒருவேளை திருப்பூர் தொகுதியை இழக்க நேரிட்டால் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தனித்து போட்டியிடவும் தயங்காது என்றார் அவர்.
அதேசமயம் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு அரசியல் கட்சிகளுக்குப் பாடம் கற்பிப்போம் என்று கொமதேகவினர் கோரி வருகிறார்களாம்.