ஜெ. தீர்ப்பிற்காக தள்ளிப்போன கோடை "மலர்க் கண்காட்சி” - சாதகமான தீர்ப்பால் விரைவில் தொடங்கும்?
கொடைக்கானல்: சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாக கொடைக்கானல் மலர்கண்காட்சி துவக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருவதால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். சீசனையொட்டி ஆண்டுதோறும் மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு மலர் கண்காட்சி மே 16 ஆம்தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன. கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முடிவு செய்து அழைப்பிதழ் அச்சடிக்க கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் மலர் கண்காட்சி தொடக்க விழாவில் அமைச்சர்கள் பங்கேற்பதை உறுதி செய்யாமல் இருப்பதால் விழா நடத்தும் தேதியை முடிவு செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள். இதுகுறித்து மாவட்ட உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பின் காரணமாக அமைச்சர்கள் மலர் கண்காட்சி விழாவில் பங்கேற்பதை உறுதி செய்யாமல் உள்ளனர். தீர்ப்பை பொறுத்துதான் அமைச்சர்கள் விழாவில் பங்கேற்பார்கள். அதனால்தான் மலர் கண்காட்சி தேதியை முடிவு செய்யாமல் உள்ளனர்.
அதிகாரிகள் நிலையில் மே 20 அல்லது 23 ஆம் தேதி கோடைவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் விழா நடைபெறும் தேதியை முடிவு செய்வது அமைச்சர்களின் கையில்தான் உள்ளது" என்றார்.
இதற்கிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா இன்று விடுதலை செய்யப்பட்டார். எனவே, அமைச்சர்கள் மலர் கண்காட்சியில் பங்கேற்பதை விரைவில் உறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப் படுகின்றது.












Click it and Unblock the Notifications