கொடைக்கானலில் தொடரும் கனமழை - வேகமாக நிரம்பி வரும் அணைகள்; விவசாயிகள் அவதி
கொடைக்கானல்: கொடைக்கானலில் பெய்து வரும் பலத்த மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
அங்கு நேற்றும் கன மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நகரின் அருகே உள்ள வெள்ளி நீர் வீழ்ச்சி, பியர்சோழா நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி, மூலையாறு நீர் வீழ்ச்சி உட்பட பல்வேறு நீர் வீழ்ச்சிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தொடர் மழை காரணமாக கொடைக்கானல் ஏரி நிரம்பி வழிந்த நிலையில் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து வருகின்றது.
அதே போல பெரியகுளம் நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நீர் வீழ்ச்சிகளில் இருந்து அதிக வெள்ளம் செல்வதின் காரணமாக தரைப்பகுதியில் உள்ள பல்வேறு அணைகளிலும் நீர் மட்டம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
எனினும், தொடர் மழையால் உருளை கிழங்கு, காலிபிளவர், பீன்ஸ் செடிகள் அழுகிய வண்ணம் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.