கொடநாடு காவலாளி படுகொலை பயங்கரம்.. தலைமறைவான இருவர் கேரளாவில் கைது
கொடநாடு காவலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கேரளாவில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: கொடநாடு கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இருவரைப் பிடிக்க போலீசார் கேரள மாநிலத்திற்கு சென்றனர். அங்கு பதுங்கி இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் முக்கிய ஆவணங்களை கைப்பற்ற வந்த மர்ம நபர்கள் சிலர் காவலாளி ஓம்பகதூரை அடித்துக் கொன்றுவிட்டு கொள்ளையடித்துச் சென்றனர்.
பல மர்மங்களும், திருப்புமுனைகளும் கொண்ட இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த 11 குற்றவாளிகளில் 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கனகராஜ் மரணம்
கனகராஜ் என்பவர் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். சயான் என்பர் சாலைவிபத்தில் படுகாயம் அடைந்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான மனோஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மனோஜ் கைது
அவரை கொடநாடு பங்களாவிற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவர் கொலை செய்தது குறித்து செய்முறை விளக்கம் செய்து காட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவரிடம் பெற்ற தகவலின் அடிப்படையில் மேலும் இருவரை பிடிக்க போலீசார் தயாரானார்கள்.

2 பேர் கைது
தலைமறைவாக உள்ள அவர்கள் இருவரை கைது செய்ய தீவிரம் காட்டிய போலீசார் கேரளாவிற்கு விரைந்தனர். அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், தலைமறைவாக இருந்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

ஆலோசனை
முன்னதாக, கொடநாடு கொலை பற்றி டிஎஸ்பி முரளிரம்பா மற்றும் கோவை சரக டிஐஜி தீபக் தாமுர் ஆகியோர் கோத்தகிரி காவல் நிலையத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக்கு பின்னர் கோத்தகிரியில் பேட்டி அளித்த போது கேரளாவில் இருவர் கைது செய்யப்பட்டது குறித்து முரளிரப்பா அறிவித்தார்.












Click it and Unblock the Notifications