சிறையில் இருந்தே கொடநாடு கொலையில் ஈடுபட்டது எப்படி.. இருவரை விசாரிக்க கேரளா விரைகிறது போலீஸ்
கொடநாட்டில் கொலையில் தொடர்புடைய, கார் திருட்டு வழக்கில் சிறையில் இருக்கும் இருவரிடம் விசாரணை நடத்த தமிழக போலீஸ் கேரளா விரைந்தது.
சென்னை: கொடநாடு கொலை வழக்கில் கேரள சிறையில் உள்ள இருவரை விசாரிக்க தமிழக போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் தேடப்பட்ட 11 குற்றவாளிகளில் போலீசார் இதுவரை 7 பேரை கைது செய்துள்ளனர்.
கனகராஜ் என்பவர் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். சயான் என்பர் சாலைவிபத்தில் படுகாயம் அடைந்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான மனோஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணை
அவரை கொடநாடு பங்களாவிற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவர் கொலை செய்தது குறித்து செய்முறை விளக்கம் செய்து காட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவரிடம் பெற்ற தகவலின் அடிப்படையில் மேலும் இருவர் இதில் தொடர்புடையது தெரிய வந்தது.
கேரள சிறை
இதனைத் தொடர்ந்து கார் திருட்டு வழக்கில் கேரள சிறையில் இருக்கம் இருவரை தமிழக போலீசார் விசாரிக்க திட்டமிட்டனர். ஜெம்சீர், ஜித்தின் ஜாய் ஆகிய இருவரிடம் இன்று விசாரிக்க தமிழக போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
அழைத்து வர..
கேரள சிறையில் இருக்கும் ஜெம்சீர் மற்றம் ஜித்தின் ஜாய், கொடநாடு கொலையில் எப்படி ஈடுபட்டார்கள். எந்தவிதத்தில் அவர்கள் கொள்ளை மற்றும் கொலைக்கு உதவிகளை செய்தார்கள் என்று அவர்களிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர். மேலும், அவர்களை நீலகரி மாவட்டத்திற்கு அழைத்து வரவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ரகசியம்
கேரள சிறையில் இருக்கும் இவர்கள் இருவரும் நீலகிரிக்கு அழைத்து வரப்பட்டு விசாரித்தால் மேலும் பல ரகசியங்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் பல புதிய தகவல்கள் இன்று மாலைக்குள் வெளியாகும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.