கொடநாடு கொள்ளை: கோவையில் சிகிச்சை பெறும் சயனை கொல்ல முயற்சி?
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவராக போலீசாரால் சந்தேகிக்கப்படும் சயன் என்பவரை கொல்ல முயற்சி நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை: கொடநாடு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் சயன் சிகிச்சை பெறும் மருத்துவமனையின் காம்பவுண்டு பகுதியில் ஏற முயன்ற மர்ம நபர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இவர், சயனை கொலை செய்ய முயன்றவராக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி காவலாளி ஓம் பகதூரை கொன்று விட்டு ஜெயலலிதா, சசிகலா அறையில் இருந்த பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளாக சந்தேகிக்கப்பட்ட டிரைவர் கனகராஜ், சேலம் அருகே சாலை விபத்தில் மரணமடைந்தார். கனகராஜின் நண்பர் சயன் கேரளா அருகே விபத்தில் சிக்கினார். அவரது மனைவி, குழந்தை மரணமடைய, இவர் கடந்த ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
சயன் சிகிச்சை
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் சயன், அவரிடம் நீலகிரி மாவட்ட எஸ்.பி விசாரணை நடத்தியுள்ளார். அவரும் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலை முயற்சி
வியாழக்கிழமை நள்ளிரவு இவரது அறை அருகே காம்பவுண்ட் சுவர் ஏறிய ஒரு நபர், மின்சாரம் தாக்கி கீழே விழுந்து காயம் அடைந்தார். சுய நினைவு இன்றி கிடந்த அவரை ஊழியர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஏவியது யார்
அந்த நபர் அழுக்கு உடையுடன், மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் காணப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள் சயன் வசம் இருப்பதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு அதிகரிப்பு
மனநிலை பாதிக்கப்பட்டவர் தோற்றத்தில் கூலிப்படையை சேர்ந்த ஒருவரை அனுப்பி, கொலைசெய்ய திட்டமிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மின்சார தாக்குதல் காரணமாக அவர் பேச இயலாத நிலையில் இருக்கிறார். சயனை கொல்ல முயற்சி நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.