என்ன கொடுமை இது.. அரசு சிமெண்ட் வெளிச்சந்தையில் விற்பனை.. அதிகாரிகள் அட்டகாசம்.. கொதிக்கும் கொடுமுடி
அரசு சிமெண்ட் மூட்டைகளை வெளிச்சந்தைக்கு விற்பதை தடுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
கொடுமுடி: கொடுமுடியில் மலிவுவிலை சிமெண்ட் மூட்டைகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக பொதுமக்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதுடன், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிச்சந்தைகளில் அதிக விலைக்கு சிமெண்ட் முட்டைகள் விற்பனை செய்வதால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அரசின் சார்பில் மலிவுவிலை சிமெண்ட் மூட்டைகள் விற்பனை செய்யப்படுகிறது.
வெளிச்சந்தையில் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு மூட்டை சிமெண்ட் அரசின் சார்பில் 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. குடும்ப அட்டையின் நகலை வழங்கினால் 100 மூட்டைகளும், வீடு கட்டுவதற்கான வரைபடத்தின் நகல் வழங்கினால் 250 மூட்டைகளும் வழங்கப்படும். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் மலிவுவிலை சிமெண்ட் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் மலிவுவிலை சிமெண்ட் விற்பனையில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. மலிவுவிலை சிமெண்ட் மூட்டை கேட்கும் பொதுமக்களை அலைக்கழிப்பதாகவும், வெளிச்சந்தையில் சிமெண்ட் மூட்டைகளை அரசு அதிகாரிகள் விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.