சென்னை பேக்கரி தீவிபத்து.. படுகாயம் அடைந்த 3 பேரின் நிலை கவலைக்கிடம்
சென்னை கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
சென்னை: கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 47 பேர் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் இவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை கொடுங்கையூரில் உள்ள பேக்கரியில் நேற்று இரவு திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் தீயணைப்பு வீரர் ஏகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 47 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர். இவர்களை நேரில் சென்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், படுகாயம் அடைந்தவர்களில் 3 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்தார். படுகாயம் அடைந்த அனைவருக்கும் உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தீவிபத்தில் காயமடைந்தவர்களில் 9 பேர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தீவிபத்தில் காயமடைந்த காவலர்கள் 5 பேரும், தீயணைப்பு வீரர்கள் 3 பேரும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.