கொங்குப் பாசம்? அதிமுகவில் சிக்கல் தீர்ந்தது! எடப்பாடி பழனிசாமிக்கு முதல் ஆளாக ஈஸ்வரன் வாழ்த்து!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தனக்கிருந்த தடைகளை எல்லாம் உடைத்து பொதுச்செயலாளர் ஆகியிருப்பதன் மூலம் அதிமுகவில் எழுந்த சிக்கல் தீர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கொங்கு ஈஸ்வரன் விடுத்துள்ள வாழ்த்து வருமாறு;
தடைகளை தாண்டி அ.தி.மு.க வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி அவர்தம் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பல்வேறு போராட்டங்களை கடந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று இருக்கின்றார். இதன் மூலம் அ.தி.மு.க சிக்கல்களில் இருந்து காப்பாற்ற பட்டிருக்கின்றது.
அ.தி.மு.க தொண்டர்களுக்கான குழப்பம் இதன் மூலம் தீர்க்க பட்டிருக்கின்றது. ஜனநாயகம் செழித்தோங்க வேண்டுமென்றால் எதிர்க்கட்சியும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது நடந்திருப்பதை வரவேற்கின்றோம்.
எந்த ஒரு அழுத்தத்திற்கும் ஆளாகாமல் தமிழ்நாட்டினுடைய பாதுகாப்பு, வளர்ச்சி, எதிர்காலம் இவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு ஆக்கபூர்வமாக செயல்பட நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஈஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துச் சொல்லியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.