மோசமான நிதிநிலை தான் ஊழியர்கள் நிலுவைத் தொகைக்குக் காரணமா?... ஈஸ்வரன் கேள்வி?
தமிழகத்தின் மோசமான நிதநிலை தான் போக்குவரத்து தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை அரசு வழங்காததற்கு காரணமா என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோயம்புத்தூர் : தமிழகத்தின் மோசமான நிதநிலை தான் போக்குவரத்து தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை அரசு வழங்காததற்கு காரணமா என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : போக்குவரத்து தொழிலாளர்கள் முன் அறிவிப்பு ஏதுமில்லாமல் நேற்று மாலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வெளியூர்களுக்கு சென்றவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் ஆங்காங்கே பேருந்துக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலை உருவாகி இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தளவு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் தொழிற்சங்கத்தினருடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியடைந்துவிட்டது என்று அமைதியாக இருக்கக் கூடாது. தமிழக முதல்வர் போக்குவரத்துத்துறை சங்கங்களை உடனடியாக அழைத்து பேசி சுமூகத்தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தின் வளர்ச்சி முடங்கி நிதிநிலை மிகவும் மோசமாக இருப்பதால்தான் போக்குவரத்துத்துறை தொழிலாளர்களுக்கு தமிழக அரசால் நிலுவைத்தொகை வழங்க முடியவில்லையா ?. போக்குவரத்துத்துறை தொழிலாளர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையையும், ஊதிய உயர்வையும் வழங்க தமிழக முதல்வர் வழிவகை செய்ய வேண்டும் என்றும் ஈஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.