கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகளின் திருவிழா தொடங்கியது - ஏராளமானோர் பங்கேற்பு
உளுந்தூர்பேட்டை கூத்தாண்டவர் கோயில் கூவாகம் சித்திரை பெருவிழா சிறப்பாக தொடங்கியது.
Recommended Video

உளுந்தூர்பேட்டை: உலகப் புகழ்பெற்ற உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா சாகைவார்த்தலுடன் நேற்று தொடங்கியது.
முக்கிய நிகழ்வான அரவான் கண்திறத்தல் வரும் மே 1ஆம் தேதி நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

இந்த திருவிழாவில் கூத்தாண்டவர் எனப்படும் அரவாண் சுவாமியை தங்களது கணவராக ஏற்றுக்கொண்டு கோவிலில் தாலி கட்டிக் கொள்வார்கள். பின்னர் அரவாண் களப்பலிக்கு பின்னர் திருநங்கைகள் அனைவரும் விதவை கோலம் ஏற்பது வழக்கம். பொதுவாக இந்த விழா 18 நாட்கள் நடைபெறும்.
அதன்படி இந்தாண்டுக்கான சித்திரை பெருவிழா, சாகைவார்த்தலுடன் நேற்று துவங்கியது. இதையொட்டி, பெண்கள் கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, மாரியம்மனுக்கு படையலிட்டனர்.
சுவாமிக்கு திருக்கண் திறப்பு நிகழ்ச்சி, மே 1ம் தேதி நடக்கிறது. அன்றுதான் திருநங்கைகளின் முக்கிய திருவிழாவாகும். அன்றையதினம் திருநங்கைகள் அனைவரும் மணப்பெண் போல தங்களை அலங்கரித்து கொண்டு அங்குள்ள கடைகளில் புதிதாக மஞ்சள் கயிறு மற்றும் தாலியை வாங்கி வந்து கோயில் முன் கூடுவர். பின்னர், கோயிலில் உள்ள பூசாரிகளின் கையால் அவர்கள் தாலி கட்டிக் கொள்வர்.
திருமணம் முடிந்ததும், அதன் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் இரவு முழுவதும் கோயிலில் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வர். மறுநாள் 2ம் தேதி தேரோட்டமும், 3-ம் தேதி விடையார்த்தியும் நடைபெற உள்ளன. இறுதியில் மே4-ம் தேதி தர்மர் பட்டாபிஷேத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
அதன்படி நேற்று துவங்கியுள்ள இந்த விழாவில் பங்கேற்று கூத்தாண்டவரை வழிபடுவதற்காக மும்பை, டெல்லி, புனே, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் இதில் பங்கேற்று சிறப்பித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications