சாகை வார்த்தலுடன் கோலாகலமாக தொடங்கியது கூத்தாண்டவர் கோவில் சித்திரைப் பெருவிழா!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா தொடங்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் கடந்த 21ம் தேதி சாகை வார்த்தலுடன் சித்திரை பெருவிழா துவங்கியது. மே 5ம் தேதி சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சியும், 6ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. இதில் நாடெங்கிலுமிருந்து பல ஆயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் இவ்விழாவில் பங்கேற்பர்.

கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு கூவாகத்தில் தங்கும் விடுதி, கழிப்பறை மற்றும் அடிப்படை வசதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடந்தது. திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஆர்.டி.ஓ., பாரதிதேவி தலைமை தாங்கினார்.

இந்து அறநிலையத்துறை செயல்அலுவலர் முத்துலட்சுமி, அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஜெயபாலன், துணை பி.டி.ஓ., ரமேஷ், ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் பெருமாள், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சந்தானகுமார் உள்ளிட்ட அலுவர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவில் விழுப்புரம் மாவட்டம் மட்டுமல்லாமல் இதர மாவட்டங்களில் இருந்தும், இதர மாநிலங்களில் இருந்தும் ஆயிரகணக்கான திருநங்கைகள் கலந்து கொள்வது வழக்கம். இதனால் இத்திருவிழாவை எந்தவித அசம்பாவிதங்களுமின்றி, சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.

தற்காலிக பஸ் நிறுத்தம், இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் அமைக்கப்படும். தடையில்லா மின்சாரம் வழங்கவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், தற்காலிக கழிப்பறை வசதி ஏற்படுத்தி தருவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications