கொடநாடு பங்களா காவலாளி படுகொலை: ரத்தக் கறை படிந்த கையுறையை சரியாக எரிக்காததால் சிக்கிய சக காவலாளி
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவின் காவலாளியை கொலை செய்தது சக காவலாளியான கிஷன்பகதூர் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஊட்டி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது மற்றொரு காவலாளியான கிஷன்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தக் கொலை குறித்து விசாரிக்க டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலையாளிகளை தேடி தனிப்படைகள் தீவிர வேட்டையில் ஈடுபட்டன.
திடீர் திருப்பம்
இந்த தேடுதேல் வேட்டையின் திடீர் திருப்பமாக, படுகாயம் அடைந்த கிஷன்பகதூர்தான், ஓம்பகதூரைக் கொலை செய்தவர் என்று போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
எப்படி?
ஓம்பகதூரை கொலை செய்த போது கிஷன்பகதூர் கையுறை அணிந்தே கொலை செய்துள்ளார். கொலை செய்த பின்னர், கையுறையை கழட்டி ஓர் இடத்தில் போட்டு அவர் கொளுத்தியுள்ளார். அப்போது அந்த கையுறையில் உள்ள ஒரு விரல் மட்டும் சரியாக எரியாமல் இருந்துள்ளது. இதனை கிஷன்பகதூர் அவசரத்தில் கவனிக்காமல் இருந்துள்ளதாகத் தெரிகிறது.
கைரேகை
இந்நிலையில், போலீசார் கொலை குறித்த தடயங்களை தேடும் போது கையுறையை கைப்பற்றியுள்ளனர். தடயவியல் சோதனையில் எரியாத பகுதியில் இருந்த விரல் ரேகையும் படுகாயம் அடைந்துள்ள கிஷன்பகதூர் கைரேகையும் ஒத்துப் போயுள்ளன.
இன்று கைது?
இதனையடுத்து, ஓம்பகதூரை கொலை செய்தது சக காவலாளியான கிஷன்பகதூர்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இந்நிலையில் இன்று அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. கைது செய்யப்பட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.