ஜெ.வை கண்ணாடி வழியாக பார்த்தாக செங்கோட்டையன் சொல்வது பொய்: கேபி முனுசாமி காட்டம்
ஜெயலலிதாவை அப்பல்லோவில் கண்ணாடி வழியாக பார்த்ததாக செங்கோட்டையன் பேசியதற்கு முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் கண்ணாடி வழியாக பார்த்ததாக அமைச்சர் செங்கோட்டையன் சொல்வது பொய் என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது யாரையும் பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை என்பது தொடர் குற்றச்சாட்டு. தற்போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் இதை கூறி வருகிறார்.
சைகையில் பேசினார்
ஆனால் இதற்கு அமைச்சர்கள் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதா தாம் கண்ணாடி வழியில் பார்த்தேன்; அவர் சைகையில் பேசினார் எனவும் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
கேபி முனுசாமி கண்டனம்
இதற்கு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கே.பி. முனுசாமி கூறியதாவது:
ஜெ. ஆன்மாவுக்கு துரோகம்
சசிகலாவைக் காப்பாற்ற துடிக்கிறார் செங்கோட்டையன். செங்கோட்டையனின் இந்த கருத்து ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்கிற துரோகம்.
எச்சரிக்கை
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இதை பற்றி செங்கோட்டையன் ஏன் பேசவில்லை. இப்படி பேசிக் கொண்டிருந்தால் நாங்கள் வேறுவகையில் அதை எதிர்கொள்வோம் என எச்சரிக்கிறேன்.
டிடிவி தினகரனுக்கு தொடர்பே இல்லை
முதல்வர் பொறுப்பில் இருந்த போதுதான் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைப்பேன் என ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். டிடிவி தினகரனுக்கும் அதிமுகவுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை.
இவ்வாறு கே.பி. முனுசாமி தெரிவித்தார்.