சண்டிகரில் மர்ம மரணமடைந்த கிருஷ்ணபிரசாத்தின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
சண்டீகரில் மர்மமான முறையில் இறந்த தமிழக மருத்துவ மாணவர் கிருஷ்ணபிரசாத்தின் உடல் இன்று ராமேஸ்வரத்துக்கு கொண்டு வரப்படும்.
ராமேஸ்வரம்: சண்டீகரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர் கிருஷ்ண பிரசாத்தின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விமானம் மூலம் இன்று ராமேஸ்வரத்துக்கு அவரது உடல் கொண்டு வரப்படும் என தெரிகிறது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமசாமி குருக்களின் மகன் கிருஷ்ணபிரசாத். இவர் சண்டீகரில் மத்திய அரசின் கட்டுபாட்டில் செயல்பட்டு வரும் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் (PGIMER)மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இவர் விடுதி அறையில் நேற்று மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். தகவலறிந்து அவரின் தந்தை உட்பட உறவினர்கள் சண்டீகருக்கு புறப்பட்டு சென்றனர்.
அவரின் மரணம் குறித்து கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் சண்டீகர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இன்று மதியம் விமானம் மூலம் அவரது உடல் சண்டீகரில் இருந்து மதுரை வருகிறது.
அங்கிருந்து இன்றிரவு ராமேஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.