விமானப்படை தளத்தில் தீவிரவாத தாக்குதல்: கூடங்குளத்தில் கமண்டோக்கள் குவிப்பு
நெல்லை: பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாத தாக்குதல் எதிரோலியால் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கூடங்குளம் அணு மின் நிலையம், விஜயநாராயணம் கடற்படை தளம் ஆகியவற்றில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு கமண்டோ படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லையை ஓட்டியுள்ள பதன்கோட் விமானப்படை தளத்தில் கடந்த இரண்டாம் தேதி அதிகாலை தீவிரவாத கும்பல் புகுந்து கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். உளவுத்துறை தகவலால் ஏற்கனவே தயார் நிலையில் இருந்த ராணுவத்தினர், தேசிய பாதுகாப்பு படையினர், அதிரடி படையினர் மற்றும் விமானப்படையினரும் சேர்ந்து தீவிரவாதிகள் மீது எதிர் தாக்குதல் நடத்தினர்.

இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்ட நிலையில் அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மறுநாள் மீண்டும் தாக்க தொடங்கினர். இதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். இதுவரை 3 பேர் கொல்லப்பட்ட நிலையில் அங்கு மேலும் இரண்டு பேர் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. 3வது நாளாக நேற்றும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். பதன்கோட் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அனைத்து மாநில அரசுகளையும் உஷார்நிலையில் இருக்குமாறு மத்திய உள்துறை எச்சரித்து வருகிறது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம், மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு நிலையம், விஜயநாராயணம் கடற்படை தளம் ஆகியவை இயங்கி வருகி்ன்றன. கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்திக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீவிரவாத மிரட்டல் சம்பவத்தை அடுத்து அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய தொழில் பாதுகாப்பு படை, ரிசர்வ் போலீஸ், கடலோர காவல் படையினர் அங்கு 24 மணி நேரமும் ரோந்து சுற்று வருகின்றனர். மேலும் கூடுதலாக மகேந்திரகிரி, விஜயநாராயணம் கடற்படை தளம் ஆகியவறறில் துப்பாக்கி ஏந்திய கமண்டோ படையினர் கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications