பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்பட்ட கூடங்குளம் அணு உலை மீண்டும் இயக்கம்!
நெல்லை: கூடங்குளம் அணு மின்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முதல் அணு உலை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் அணு உலை கடந்த வருடம் ஜூலை 13 ஆம் தேதி அணு பிளவுக்கு உட்படுத்தப்பட்டது.
பின்னர் மின் உற்பத்தி செய்வதற்கான பணிகள் தொடங்கின. அக்டோபர் 22 ஆம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு கூடங்குளத்தில் 160 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. பின் கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டப்பட்டது. ஜூன் 7 ஆம் தேதி பிற்பகல் 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் அணு உலைகளில் பராமரிப்பு பணி செய்வது வழக்கம். இதனால் கடந்த ஜூலை 15 ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் கூடங்குளம் முதல் அணு உலையில் ரஷ்ய விஞ்ஞானிகள் முன்னிலையில் பல்வேறு ஆய்வு பணிகள் நடந்து வந்தன.
முதல் அணு உலையின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய பல்வேறு கட்ட சோதனை நடந்தது. இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கூடங்குளத்தில் மீண்டும் 1000 மெகா வாட் மின் உற்பத்தி துவங்க அணு சக்தி ஒழுங்கு முறை வாரியம் அனுமதி அளித்தது.
இதையடுத்து கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தியை துவங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. காலை 5.39 மணிக்கு மீண்டும் கூடங்குளம் முதல் அணு உலை செயல்பட தொடங்கியது. இதனால் விரைவில் மின் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்று கூடங்குளம் அணு உலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.