மீதமுள்ள 140 வழக்குகளையும் திரும்பப் பெறக் கோரி ஜெ.விடம் கூடங்குளம் போராட்டக் குழு மனு
சென்னை: கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட 213 வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற்றிருப்பது போல மீதமுள்ள 140 வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் கூடங்குளம் போராட்டக் குழுவினர் மனு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயக்குமார் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில்,
இன்று காலை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மற்றும் பூவுலகின் நண்பர்கள் இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள் மை.பா., முகிலன், மில்டன், கெபிஸ்டன், சுந்தர் மற்றும் நான் அதிமுக பொதுச்செயலாளர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களை அவரது போயஸ் கார்டன் வீட்டில் சந்திக்கச் சென்றோம். அவரது தனி உதவியாளர்களும், காவல்துறை அதிகாரிகளும் கலந்து பேசி எங்களை வீட்டிற்குள் அனுமதித்தனர். பின்னர் ஒரு தனி அலுவலர் வந்து எங்கள் கோரிக்கை மனுவை வாங்கிச் சென்றார்.
தமிழக அரசு 213 வழக்குளைத் திரும்பப் பெற்றிருப்பது நன்றி பாராட்டலுக்கு உரியது என்றாலும், கூடுதலான சுமார் 140 வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்று கோரினோம். எங்கள் பகுதி மக்கள் வெளிநாடுகளில் வேலைக்குப் போவதற்கு பாஸ்போர்ட் தர மறுக்கிறார்கள்; எனவே அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுங்கள் என்று வலியுறுத்தினோம்.
முதலிரண்டு அணுமின் நிலையங்களும் ஓடாமல் கிடப்பதை சுட்டிக்காட்டி, அவற்றில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். கூடங்குளத்தில் மூன்றாவது, நான்காவது அணுமின் நிலையங்கள் கட்டக் கூடாது என்று ஆளும் கட்சி நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தோம்.
ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கையின் தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட ஆவன அனைத்தும் செய்ய வேண்டிக் கொண்டோம்.
ஆங்கிலத்திலான எங்கள் மனுவை பொதுச்செயலாளர் கவனத்திற்கு கொண்டு சென்று விடுவதாக உதவியாளர் உறுதியளித்தார் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications