குலசை தசரா திருவிழா: அக்.5ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மைசூரில் 10 நாட்கள் தசரா திருவிழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல் தென் தமிழ்நாட்டில் 10 நாட்கள் தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது.
பக்தர்கள் வேடமிட்டு ஊர் ஊராக சென்று காணிக்கை பெற்று வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றுவார்கள்.

குலசை முத்தாராம்மன்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறிய கடற்கரை கிராமம் குலசேகரப்பட்டணம். இங்குள்ள முத்தாரம்மன் சக்திவாய்ந்த அம்மனாக பக்தர்களால் போற்றப்படுகிறார். இங்கு வரும் 5ம் தேதி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி 5-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை தினசரி நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ஒவ்வொரு திருக்கோலத்தில் எழுந்தருள்வார்.

காப்புக்கட்டும் பக்தர்கள்
அக்டோபர் 5ம் தேதி விரதம் இருந்து வரும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து காப்பு கட்டுவார்கள். அதன்பின் தனக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் செய்வார்கள்.

கலை நிகழ்ச்சிகள்
பக்தர்கள் தசரா குழு அமைத்து நையாண்டி மேளம், கரகம், காவடி, குறவன், குறத்தி மற்றும் கிராமிய கலைகள், டிஸ்கோ ஆகியன இணைத்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை பெறுவார்கள். இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தசரா திருவிழா களை கட்டும்.

சூரசம்ஹாரம்
விழாவின் முக்கிய நாளான 14ம் தேதி திங்கட்கிழமை காலையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்குவார்கள்.நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு செல்லும் போது காளி வேடம் அணிந்த பக்தர்கள் அம்மனை அணிவகுத்து செல்வார்கள். பின்பு கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.

அம்மன் வீதி உலா
அக்டோபர் 15ம் தேதி செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் தெருவீதி உலா சென்று மாலை சுமார் 5 மணி அளவில் கோவிலுக்கு வந்ததும் முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்படும்.தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களுக்கு காப்பு அவிழ்க்கப்படும். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.

மதுக்கடைகள் மூடப்படுமா?
அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்களும் உடன்குடி குலசேகரன்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அனைத்து மதுக்கடைகள் மற்றும் மதுபார்களை மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதேபோல் அக்டோபர் 15ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications