94 குழந்தைகள் இறந்த கும்பகோணம் தீவிபத்து பள்ளி – ஒரு நபர் கமிஷன் ஆய்வு
கும்பகோணம்: கும்பகோணம் தீவிபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக பலியான விபத்துப் பகுதியினை ஒரு நபர் கமிஷன் நேரில் ஆய்வு செய்தது.
கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில், 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஜூலை மாதம் வழங்கப்பட்ட நிலையில், கூடுதல் நிவாரணம் கேட்கும் பெற்றோர்களின் கோரிக்கை குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணைக் கமிஷனை தமிழக அரசு அமைத்தது.
இந்தநிலையில் தீ விபத்து நடந்த இடத்தை ஒரு நபர் விசாரணைக் கமிஷன் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் குழந்தைகள் நினைவு மண்டபத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, கூடுதல் நிவாரணம் கேட்டு கோரிக்கை மனு அளிப்பதற்கான காலக்கெடு 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் வசதிக்காக விசாரணையை கும்பகோணம் பகுதியிலேயே மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.