காந்தி பிறந்தநாளன்று ஒவ்வொரு வருடமும் 1 ரூபாய்க்கு “டீ”- குருவை பின்பற்றும் கும்பகோணம் முதியவர்
கும்பகோணம்: கும்பகோணத்தில் காந்தியவாதியான முதியவர் ஒருவர் தனது முன்னாள் டீக்கடை ஓனரும், குருநாதருமானவரின் காந்திய வாதக் கொள்கைகளைப் பின்பற்றி காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 அன்று ரூபாய் 1க்கு டீ விற்று வருகின்றார்.
கும்பகோணம் துக்காம்பாளையத் தெருவில் வசித்து வந்தவர் காந்தியவாதி கணபதி. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பகோணம் துக்காம்பாளைத் தெருவில் இருந்த டீ கடையில் பணியாளராக சேர்ந்தார். சில ஆண்டுகளில் கடை உரிமையாளர் காலமான பின்னர், அதே பகுதியில் சிறிய அளவில் சொந்தமாக டீ கடை வைத்த கணபதி, திருமணம் செய்து கொள்ளாமல் இறக்கும் வரை பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.
தனது ஏழ்மை நிலையிலும் தள்ளாத வயதிலும் காந்திய கொள்கையைப் போற்றும் வகையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி தனது டீ கடையில் 1 ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வந்தார். முதலில் மற்ற கடைகளில் 2 ரூபாய்க்கு டீ விற்பனை செய்தபோது இவர் காந்தி பிறந்த நாளன்று இலவசமாகவே டீ வழங்கி வந்தார். கால ஓட்டத்தில் விலைவாசி உயர்வினால் இலவசமாக வழங்க இயலாமல் போனதால் சலுகை விலையாக ரூபாய் 1 க்கு டீ விற்பனை செய்தார். இந்நிலையில், கணபதி கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

இந்நிலையில் கணபதியின் வாரிசாக அதே கடையை நடத்தி வரும் முதியவரான விஸ்வநாதன் அவரது கொள்கைகளைப் போற்றும் வகையில், அவரைப் போலவே காந்தி பிறந்த நாளான நேற்று காலை முதல் இரவு வரை 1 ரூபாய்க்கு டீ விற்பனை செய்தார்.












Click it and Unblock the Notifications