திருவிடைமருதூர்.. துடிக்க துடிக்க நடு ரோட்டில் ஆசிரியையை கொன்ற நபர் சிக்கினார்!
கும்பகோணம் ஆசிரியை கொலையில் கொலையாளி சிக்கியுள்ளார். ஒரு தலைக் காதலால் இந்தக் கொலை நடந்துள்ளது.
Recommended Video
கும்பகோணம்: திருவிடைமருதூரில் ஆசிரியை வசந்த பிரியா கொலை வழக்கில் அவரைக் கொலை செய்து விட்டுத் தப்பிய அவரது மாமா மகன் நந்தகுமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நிச்சயதார்த்தம் முடிந்து 5 நாள்தான் ஆன நிலையில், ஆசிரியை வசந்த பிரியா கொடூரமாக துடிக்கத் துடிக்க கொலை செய்யப்பட்டதால் திருவிடைமருதூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாபநாசம் 108 சிவாலயம் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது 24 வயது மகள் வசந்தபிரியா. ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்த இவர், கும்பகோணம் லால் பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் டீச்சராக வேலை செய்து வந்தார்.
படித்துறையில் டீச்சர்
இவருக்கும் வலங்கைமானைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 28 ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை ஸ்கூல் முடிந்ததும் வெளியே வந்த இவரை, பள்ளி வாசலில் ஒருவர் பைக்கில் அழைத்து சென்றுள்ளார். இருவரும் காவிரி ஆற்றங்கரை படித்துறைக்கு சென்றிருக்கிறார்கள்.
சரிந்து விழுந்தார்
ஆனால் சிறிது நேரத்தில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்தம் சொட்டிய நிலையில், உயிரை கையில் பிடித்து கொண்டு அலறி அடித்து கொண்டு நடுரோட்டில் ஓடி வந்தார் வசந்தபிரியா. தொடர்ந்து ஓட முடியாத நிலையில், அப்படியே ரோடு ஓரமாக சரிந்து விழுந்து ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக திருவிடைமருதூர் போலீசாருக்கு தகவல அளித்தனர்.
பைக்கில் சென்ற டீச்சர்
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வசந்தபிரியாவின் உடலைக் கைப்பற்றியதுடன், கொலை செய்யப்பட்ட இடத்தில் இரண்டு செல்போன்கள், பேனாகத்தியும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து டீச்சரின் கொலையில் விசாரணையை போலீசார் உடனடியாக ஆரம்பித்தனர். பள்ளி வாசலில் இளைஞர் டீச்சரை பைக்கில் ஏற்றிய காட்சி அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவானதை கொண்டு இந்த விசாரணை ஆரம்பமானது.
வாக்குவாதம்
படித்துறையில் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வாக்குவாதம் தகராறாக முற்றிப்போகவும், பிறகு ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த நபர், மறைத்து வைத்திருந்த கத்தியால் வசந்தப் பிரியாவின் கழுத்தை அறுத்துள்ளதாகவும் போலீசார் சந்தேகித்தனர்.
மர்ம நபர்
மேலும் அந்த இளைஞர் ஏற்கனவே டீச்சரை அவர் காதலித்தவராக இருக்கலாம் என்றும் வேறு ஒருவருடன் நிச்சயம் ஆகிவிட்ட ஆத்திரத்தில் டீச்சரை கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் யூகித்தனர். அதனால் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள கொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வந்தனர்.
அதிர்ச்சித் தகவல்
விசாரணையில் பைக் ஆசாமியின் பெயர் நந்தகுமார் என்றும், அவர் வசந்த பிரியாவின் சொந்த மாமன் மகன் என்றும் தெரிய வந்தது. நந்தகுமார், வசந்த பிரியாவை ஒரு தலையாக காதலித்துள்ளார். ஆனால் வசந்த பிரியா வீட்டில் வேறு ஒருவருக்கு நிச்சயித்து விட்டனர்.
மறுத்தார் வசந்த பிரியா
இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் நேற்று வசந்த பிரியாவை பள்ளி முடிந்ததும் பைக்கில் ஏற்றி படித்துறைக்குக் கூட்டிப் போய் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுத்துள்ளார் வசந்த பிரியா. இதனால் கோபமடைந்த நந்தகுமார் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பினார். திட்டக்குடிக்கு போன அவர் அங்கு தலைமறைவாக இருந்தார். அவரை இரவோடு இரவாக போலீஸார் கைது செய்தனர்.