கும்பகோணம் பள்ளி தீ விபத்து... அதிக இழப்பீடு வழங்குவதற்கு அரசுக்கு கால அவகாசம்: ஹைகோர்ட்
சென்னை: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டு தொகையை கூடுதல் வட்டியுடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 2004-ஆம் ஆண்டு, ஜூலை 16-ஆம் தேதி கும்பகோணத்தில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 16-குழந்தைகள் தீ காயங்களுடன் உயிர் தப்பினர். தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கான இழப்பீட்டை நிர்ணயம் செய்வது தொடர்பாக, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார்.

இதில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு, தலா ரூ.5 லட்சமும், கடுமையான தீக்காயம் அடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.6 லட்சமும், சிறு காயம் அடைந்த குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கே.வெங்கட்ராமன் பரிந்துரை செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.
ஆனால், இந்த இழப்பீட்டு தொகை மிகவும் குறைவாக உள்ளது என்றும், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.25 லட்சமும், காயமடைந்த குழந்தைகளுக்கு ரூ.20 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர் சங்கத்தினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு 9 சதவீத வட்டியுடன் சம்பவம் நடைபெற்ற ஆண்டில் இருந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இழப்பீட்டை எவ்வாறு வழங்குவது, அது தொடர்பான நடவடிக்கை எடுப்பதற்கும், அதிக இழப்பீடு வழங்குவது தொடர்பாக பதில் அளிக்கவும் கால அவகாசம் கோரப்பட்டது. அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் 6 வாரம் காலம் அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications