கூலிப்படைத் தலைவன் குமுளி ராஜ்குமார் தப்பியோட்டம்.. பீதியில் அரசியல் பிரமுகர்கள்

தென்மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக பழிக்குபழி வாங்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. நெல்லை கோபாலசமுத்திரம் பகுதியில் கடந்த மாதம் தர்மராஜ், ஓமநல்லூரில் முருகன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
அதே மாதத்தில் தச்சநல்லூரில் விவசாயி ராஜ், சுத்தமல்லி தொழிலாளி பரமசிவன் உள்பட கடந்த இரு மாதங்களில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லையில் இயங்கி வரும் கூலிப் படையினர் தங்களுக்கு எதிராக உள்ளவர்களை கொலை செய்ய தி்ட்டமிட்டு வருவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஜனவரி 10ம் தேதிக்குள் (பசுபதி பாண்டியன் நினைவு தினம்) சிலர் தங்கள் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து தென் மாவட்டத்தில் கூலிப்படையினர் மற்றும் ரவுடிகளை கைது செய்ய எஸ்பிக்களுக்கு டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டார். அதன் பேரில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ரவுடிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லையில் கூலிப்படை தலைவன் குமுளி ராஜா என்கிற ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். அவனது கூட்டாளி சத்திரம் புதுக்குளத்தை சேர்ந்த கன்னபிரான் கோர்ட்டில் சரண் அடைந்தான். இவர்கள் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இவர்களில் ராஜ்குமார் சில தினங்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்தான். அதன்படி தாழையூத்து காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும். ஆனால் இதுவரை கையெழுத்து போடவில்லை. அவன் வட மாவட்டத்தி்ற்கு தப்பி சென்று விட்டதாக தெரிகிறது.
அவர்கள் ஏதோ திட்டத்தோடு தான் தப்பியுள்ளனர் என போலீசார் கருதுவதால் அனைத்து மாவட்டங்களையும் போலீசார் உஷார்படுத்தியுள்ளனர். குறிப்பாக அரசியல் பிரமுகர்களை அவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரித்துள்ளதால் அவர்கள் பலர் கிலியடித்து போய் உள்ளனர்.












Click it and Unblock the Notifications