கட்சித் தலைமை வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் போட்டி: குஷ்பு
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட கட்சித்தலைமை வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன் என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, கூட்டணி தொடர்பாக நல்ல முடிவை விஜயகாந்த் எடுப்பார் என்று தெரிவித்தார். அதிமுக அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று திமுகவும், காங்கிரஸ் கட்சியும் விரும்புகிறது. விஜயகாந்தும் அதைத்தான் விரும்புகிறார். எனவே அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஐந்து ஆண்டுகளில் செய்யாததை தேர்தலுக்காக தமிழக அரசு செய்து வருகிறது. திசை திருப்பவே கார்த்தி சிதம்பரத்தின் விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர் என்றார். யாரும் ஓடிப்போய்விட மாட்டார்கள். 2ஜி ஊழல்னு சொன்னாங்க சம்பந்தப்பட்டவங்க ஊரை விட்டு ஓடிப்போகலையே, என்று கேட்ட குஷ்பு அதிமுகவினர் வேண்டும் என்றே அவையை முடக்குவதாக குஷ்பு குற்றம் சாட்டினார்.
தேர்தலில் போட்டியிட தமக்கு ஆசையில்லை என்றும் கட்சித்தலைமை வாய்ப்பு அளித்தால் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் குஷ்பு தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர் ஒருவர், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று கேட்டார், அதற்கு பதிலளித்த குஷ்பு, தேர்தலில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல், தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தான் முடிவு செய்ய வேண்டும். இருப்பினும் தேர்தலில் போட்டியிடும் ஆசை இல்லை. கட்சியை வளர்க்கவே தாம் விரும்புவதாக கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications