ஜெயலலிதா நலமுடன் வீடு திரும்பி மக்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும்- குஷ்பு
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்பி தீபாவளிப் பண்டிகையை தமிழக மக்களுடன் கொண்டாட வேண்டும் என்று
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார். இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த குஷ்பு அங்கே முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களை சந்தித்து ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிக்சை பெற்று வருகிறார். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி தொடங்கி திமுக பொருளாளர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் தினசரியும் அப்பல்லோவிற்கு வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து அமைச்சர்களிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே இன்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனைக்குள் சென்று அமைச்சர்களிடமும், மருத்துவர்களிடமும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அரைமணிநேரம் மருத்துவமனைக்குள் இருந்த குஷ்பு, வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசினார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பூரண குணமடைந்து வருவதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். அவர் விரைவில் நலமடைய இறைவனை வேண்டுகிறேன். முதல்வர் விரைவில் நலமுடன் வீடு திரும்பி மக்களுடன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றும் குஷ்பு தெரிவித்தார்.