வட மாநிலத்தில் இருந்து வந்த குஷ்புவுக்கு தமிழ் பண்பாடு தெரியாது: வேல்முருகன் தாக்கு
விழுப்புரம்: வடமாநிலத்தில் இருந்து வந்த குஷ்புவுக்கு தமிழ் பண்பாடு தெரியாது, எனவே நாவடக்கத்தோடு இருக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
வேல்முருகன் விழுப்புரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இளங்கோவனின் நாகரீகமற்ற பேச்சை கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டம் நடக்கிறது. அவர் தான் கூறிய கருத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும். இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து, அவர் பேசியது தவறு இல்லை என்று நடிகை குஷ்புவும் கருத்து தெரிவிக்கிறார்.
வடமாநிலத்தில் இருந்து வந்த அவருக்கு தமிழ் பண்பாடு குறித்து தெரியாது. ஏற்கனவே இதே போல் பேசி மக்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார். குஷ்புவுக்கு நாவடக்கம் தேவை. இல்லையென்றால் அவர் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு வேல்முருகன் தெரிவித்தார்.