நடுக்கடலில் இலங்கை மீனவர்கள் வழிப்பறி... தமிழக மீனவர்களின் வலையை பிடுங்கிச் சென்றனர்
பாம்பன்: சிங்களக் கடற்படையினர் தொல்லை போதாது என்று தற்போது இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள், பாம்பன் மீ்னவர்களின் வலைகளைப் பறித்துச் சென்ற செயல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த 15ஆம் தேதி முதல் பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடி தடைகாலம் இருந்து வருகிறது. இதனால் பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரையிலான விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதில்லை. ஆனால் கரையில் இருந்து 3 கடல் மைல் தொலைவுக்குள் மீன்பிடிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 21ஆம் தேதி பாம்பனில் இருந்து ஆம்ஸ்ட்ராங் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு ஒன்றில் 7 மீனவர்கள் தங்குகடல் மீன்பிடிப்புக்கு சென்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் ஆம்ஸ்ட்ராங்கின் படகில் இருந்த சுமார் 15 வலைகளை அபகரித்து சென்று விட்டனர்.
இலங்கை மீனவர்களால் அபகரித்து செல்லப்பட்ட மீன்பிடி வலைகளின் மதிப்பு சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். வலைகள் அபகரித்து செல்லப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் நேற்று மாலை பாம்பன் திரும்பினர்.