மத்திய அரசை வழிநடத்தும் அதிகாரம் வேண்டும்: எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் ஜெ. கோரிக்கை
சென்னை: மத்திய அரசை வழிநடத்தும் அதிகாரம் வேண்டும் என்று மக்களிடம் முதல்வர் ஜெயல்லிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 97 வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் அதிமுகவினரும், எம்.ஜி.ஆர் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
கோத்தகிரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார். சென்னையில் எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு தமிழக அமைச்சர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காலத்தை வென்ற தலைவர்
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 97 பிறந்த நாள் நிகழ்ச்சி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, மாநிலத்தில் பல பகுதிகளில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டும், பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டும் வருகிறது.
சிறப்பு அன்னதானம்
பலகோவில்களில் சிறப்பு அன்னதானம் செய்யப்பட்டது. அதிமுக தொண்டர்கள் எம்.ஜி.ஆரின் பாடல்களை ஒளிபரப்பியும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
மத்திய அரசு அதிகாரம்
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஜெயலலிதா நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து, பிறந்தநாள் சிறப்பு மலரையும் வெளியிட்டார்.
பின்னர் கூடியிருந்த தொண்டர்களிடையே பேசிய அவர், மத்திய அரசை வழிநடத்தும் அதிகாரம் அதிமுகவிற்கு கிடைக்க வேண்டும் என்றார்.
40 தொகுதியும் நமக்கே
மேலும், வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அ.தி.மு.க.வினர் பாடுபட வேண்டும் என்று ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.
அமைச்சர்கள் அஞ்சலி
இந்த நிலையில், கிண்டி எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, அப்துல் ரகீம், ரமணா, மூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொலைக்காட்சிகளில் எம்.ஜி.ஆர்
சன்டிவி, ஜெயாடிவி, கலைஞர் டிவி, கேப்டன் டிவி, வசந்த் டிவி என அனைத்து தொலைக்காட்சிகளிலும் கட்சி பேதமின்றி எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் இருந்து பாடல்கள் ஒளிபரப்பாகிவருகின்றன. ராஜ் டிவியில் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன.