விவசாயிகளுக்கு ஆதரவாக வீதிக்கு இறங்கிய சென்னை, கோவை, மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
சென்னை/ கோவை/ மதுரை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரியும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகரங்களில் சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் அவர்களை அந்தந்த மாவட்ட போலீஸார் கைது செய்தனர்.
வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி, நதி நீர் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 16 நாள்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் மத்திய அரசு அவர்களது கோரிக்கைகளை கண்டுக் கொள்ளாமல் உள்ளது.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பாதிக்கப்படும் என்று 70 கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தியதை சட்டை செய்யாமல் மத்திய அரசு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதும், கைது செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் போலீஸாரால் கைது செய்தனர். சென்னையில் பாரிமுனையிலும், கோவையிலும் டவுன்ஹாலிலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications