தமிழகத்தை ‘அமைதிப் பூங்கா’வாகக் காட்ட... கொடூர கொலைகளை மூடி மறைக்கிறதா போலீஸ்?
சென்னை: சமீபத்தில் தேனியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாகக் கருதப்பட்ட இரண்டு சிறுவர்களும், ஹோமோசெக்ஸ்க்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.
சமீபத்தில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள களிமேட்டுப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடிக்குச் சென்ற இரண்டு சிறுவர்கள் மாயமானார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த சிறுவர்கள் முல்லை பெரியாறு ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
முதலில் சிறுவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், பின்னர் சிறுவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இத்தகவலைக் கேட்டு உயிரிழந்த ராகவ், மோஹித் என்ற அந்த இரண்டு சிறுவர்களின் குடும்பமும் உடைந்துபோயிருக்கிறது.
இதனால், தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது என்ற எண்ணத்தை மக்களிடம் உருவாக்க பலக் கொடூரக் கொலைகளை திசை திருப்பி விபத்துக்களாக அடையாளம் காட்டுகிறது காவல்துறை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிறுவர்கள் மாயம்...
இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ‘பால்வாடிக்குச் சென்ற உறவுக்காரச் சிறுவர்களான ராகவ் மற்றும் மோஹித் இருவரையும் திடீரென காணவில்லை. பால்வாடியில் விசாரித்த போது இருவரும் சேர்ந்து வீட்டுக்கு சென்றதாகத் தான் கூறினார்கள். ஆனால், வீடு வந்து சேரவில்லை.
முதல்கட்ட விசாரணை...
சிறுவர்களைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்தோம். இரண்டு நாளைக்குப் பிறகுதான் மார்கண்டேயன்கோட்டை பகுதியில் அவர்களது உடல் கிடப்பது தெரியவந்தது. முதல்கட்ட விசாரணையில் குழந்தைகள் ஆற்றில் அடித்துச் செல்லப் பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
சந்தேகம்...
ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை. மேலும், குழந்தைகளின் உதட்டில் காயம் இருந்தது. நாக்கு துண்டிக்கப் பட்டிருந்தது. இடது மணிக்கட்டைக் காணவில்லை. முகம் பார்க்கவே இயலாத அளவுக்கு சிதைக்கப் பட்டிருந்தது' எனத் தெரிவித்துள்ளனர்.
ஹோமோ செக்ஸ் டார்ச்சர்...
இது தொடர்பாக சிறுவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்த உத்தமபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறும் போது, ‘சிறுவர்களைக் கொலை செய்வதற்கு முன்பு கொடூரமாக ஹோமோ செக்ஸ் டார்ச்சர் செய்துள்ளனர். சிறுவர்களின் ஆசனவாயில் விந்தணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஹோமோ செக்ஸுக்குப் பிறகு, அந்தச் சிறுவர்களை தண்ணீரில் அமுக்கியிருக்கிறார்கள். அதில் மூச்சுத்திணறி உயிர் பிரிந்திருக்கிறது. எங்களுடைய சர்வீஸில் இப்படியொரு கொடூர சம்பவத்தைப் பார்த்ததுஇல்லை' என்றனர்.
தனிப்படை...
இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் சட்ட ஒழுங்கு பிரச்னை வரலாம் என்பதால் இந்த விஷயத்தை காவல்துறை அடக்கி வாசிப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தேனி மாவட்ட போலீஸ் உயரதிகாரிகளிடம்கேட்டால், ‘விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளோம். நிச்சயம் கண்டுபிடிப்போம்' என்று மட்டும் கூறுகிறார்களாம்.