தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை - ஸ்டாலின் காட்டம்
நெல்லை: தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை பெருகி வருவதால் சட்டம் ஓழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என திமுக பொருளாளர் ஸ்டாலின் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மதிமுகவினர் ஏராளமானோர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணையும் விழா நடந்தது. இதில் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது, "மதிமுகவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் விலகி திமுகவில் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து வருவதாக நிர்வாகிகள் தெரிவித்த போது நானே அங்கு வருகிறேன் என்றேன்.
பொருளாதார நிலை மற்றும் அலைச்சல் கருதி நானே வருகிறேன் என்று தெரிவித்தேன். நெல்லையில் நீங்கள் தாய் கழகத்தில் இணையும் விழாவை நடத்துங்கள் என்றேன். ஆனால் இதை ஒரு மாநாடு போல நடத்தி விட்டேர்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்றார் அண்ணா.
ஆனால் நீங்கள் திமுக தோட்டத்து மல்லிகைதான். ஏற்கனவே நீங்கள் திமுகவில் பல பணியாற்றி உள்ளேர்கள். உங்களை தலைமை கழகம் சார்பிலும், திமுக தலைவர் சார்பிலும் வரவேற்கிறேன். தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன.
4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. நான் சொன்ன புள்ளி விபரங்களில் எந்த பொய்யும் இல்லை. இதை மறுக்க தற்போதைய முதல்வருக்கு தெம்பு உண்டா. இந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 86 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்து வைத்துள்ளனர்.
ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டும தமிழக முதல்வர் பணியாற்றுகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் 11 சட்டசபை தொடர்கள் நடந்துள்ளன. தொடர்ச்சியாக 34 நாட்கள் அவர் சட்டசபையை நடத்தியதே கிடையாது. மக்களுக்காக நான் பணியாற்றுகிறேன் என்கிறார் முதல்வர். அவர் வசமுள்ள சொத்துகளை பொதுமக்களுக்கு வழங்க தயாரா" என்று பேசியுள்ளார்.