கோவை அதிமுக வேட்பாளர் அரசு வக்கீல் நாகராஜன்: கொங்கு வேளாள கவுண்டர்
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் ஏ.பி. நாகராஜன் என்பவர் போட்டியிடுகிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தனது பிறந்தநாள் அன்று அறிவித்தார்.
அதன்படி கோவையில் வழக்கறிஞர் ஏ.பி. நாகராஜன்(48) என்பவர் போட்டியிடுகிறார். கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த அவர் கோவை மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி தலைவராகவும், கவுண்டம்பாளையம் தொகுதி செயலாளராகவும் உள்ளார்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே இருக்கும் சர்க்கார் சாமக்குளம் தான் நாகராஜனின் சொந்த ஊர் ஆகும். அவர் கோவை அரசு கலை கல்லூரியில் 1983ம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார். இதையடுத்து அவர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.
நாகராஜனின் தந்தை பழனி கவுண்டர் அதிமுகவைச் சேர்ந்தவர். அவரை பார்த்து தான் நாகராஜன் அரசியலுக்கு வந்தார். 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை கோவை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக அவர் இருந்தார். அதன் பின்னர் 2011ம் ஆண்டு முதல் கோவை நீதிமன்றத்தில் மீண்டும் அரசு வழக்கறிஞராக உள்ளார்.
முன்னதாக 2005ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை பார் கவுன்சில் உறுப்பினராக இருந்தார். அவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஹரிபிரியதர்ஷினி என்ற மகளும், விஜய் பிரணவ் என்ற மகனும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications