திட்டமிட்டப்படி உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டம்: வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு
சென்னை: வழக்குரைஞர் சட்ட விதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய திருத்தங்கள் தொடர்பாக, நீதிபதிகள் ஆய்வு குழுவுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுமூக முடிவு எட்டப்படாதால், திட்டமிட்டப்படி வரும் திங்கள்கிழமை உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில் உயர்நீதிமன்றம் மேற்கொண்டுள்ள புதிய திருத்தங்களை திரும்பப் பெறக் கோரி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், புதிய திருத்தத்தில் ஆட்சேபனைக்குரிய விதிகள் எவை என்பது குறித்து வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்களிடம் கருத்து தெரிவித்தால், அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்தது.
இதற்கென உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.மணிகுமார் தலைமையில் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, ராஜீவ்ஷக்தேர், எம்.எம்.சுந்தரேஷ், பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய ஆய்வு குழுவையும் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் நியமித்தார். இந்த ஆய்வுக்குழுவின் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின்னர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் அறிவழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீதிபதிகள் குழுவுடன் வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோர் ஆலோசனை நடத்தினோம். அப்போது புதிய திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.
இதைத் தொடர்ந்து, இந்த ஆலோசனை கூட்டம் வரும் 29-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எந்தவொரு முடிவு எட்டப்படவில்லை. எனவே திட்டமிட்டப்படி திங்கள்கிழமை (ஜூலை 25) உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications