தமிழகத்தை புறக்கணித்த ரயில்வே அமைச்சர்... வைகோ, ராமதாஸ், திருமாவளவன் குற்றச்சாட்டு

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மத்திய இரயில்வே அமைச்சர் தாக்கல் செய்துள்ள இடைக்கால இரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் வழக்கம்போல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இரட்டை இரயில் பாதை அமைப்பதிலும், மின்மயமாக்கும் திட்டத்திலும் இலக்கை விஞ்சியதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்கு எந்தப் பலனும் இல்லை.
இரயில் நிலையங்கள் பராமரிப்பு, பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது போன்றவை போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமையால் முழுமைபெறவில்லை.
காங்கிரஸ் கூட்டணி அரசு நடைமுறைப்படுத்திய பொருளாதாரக் கொள்கைகளால் அனைத்துத் துறைகளும் சீர்குலைந்துவிட்டன. இந்நிலையில், இரயில்வே துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்திட அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் என்பதும் இரயில்வேதுறையை வீழ்ச்சிக்குத்தான் இட்டுச் செல்லும். மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இடைக்கால இரயில்வே பட்ஜெட் எவ்விதத்திலும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யவில்லை என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
ராமதாஸ் குற்றச்சாட்டு
இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 65 புதிய தொடர்வண்டிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றில் 9 தொடர்வண்டிகள் மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்துள்ளன.
100 கி.மீ தொலைவுக்கும் குறைவாக இயக்கப்படும் மயிலாடுதுறை - மன்னார்குடி, திருச்செந்தூர் - திருநெல்வேலி ஆகிய பயணியர் வண்டிகளை தவிர்த்துப் பார்த்தால் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள தொடர்வண்டிகளின் எண்ணிக்கை வெறும் 7 மட்டுமே. இவற்றில் முழுக்க முழுக்க தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில், தமிழகத்திற்குள்ளேயே இயங்கும் வகையில் ஒரு ரயில் கூட அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு மொத்தம் 14 ரயில்கள் கிடைத்த நிலையில் இப்போது தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால், அவை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. மொத்தத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியும், நிறைய ஏமாற்றமும் கொண்டதாக 2014-15 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
தனியார்மயமாகக் கூடாது
ரயில்வே துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அந்நிய நேரடி முதலீடுகளையும் தனியாரின் பங்கேற்பையும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப் பெரிய சேவைத் துறையாக விளங்கிக்கொண்டிருக்கும் ரயில்வே துறையை கொஞ்சம் கொஞ்சமாகத் தனியார்மயமாக்குவதற்கு இது இட்டுச்செல்லும். எனவே ரயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைகள் யாவும் தனியார்மயமாகி மக்களிடமிருந்து சுங்கம் என்கிற பெயரில் ஏராளமான பணம் பறிக்கப்படுகிறது. ரயில்வே துறையில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்தால் நெடுஞ்சாலைகளைப்போலவே இருப்புப் பாதைகளும் தனியார்மயமாகிவிடும்.












Click it and Unblock the Notifications