தமிழக அரசின் வாட் வரியால் கடுமையாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை- ஸ்டாலின், ராமதாஸ் கண்டனம்
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை : தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை 27% இருந்து 34% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை 21.43% இருந்து 25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் 77 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலை 1 ரூபாய் 77 காசுகள் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மு.கஸ்டாலின்
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: பெட்ரேல், டீசல் விலையை இதுவரை மத்தியில் உள்ள அரசுகள் ஏற்றிக் கொண்டிருந்த நிலை மாறி இந்த முறை மாநிலத்தில் ஊழலில் திளைக்கும் அதிமுக பினாமி அரசே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருக்கிறது. இதனால் விலைவாசி விண்ணைத் தொடும் அளவிற்கு விஷம் போல் ஏறும். அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் பயன்படுத்தும் பேருந்து கட்டணம் அதைவிட அதிகரிக்கும் ஆபத்து உருவாகியிருக்கிறது
வளர்ச்சியை பாதிக்கும்
ஏற்கனவே நிதி நிர்வாகச் சீர்குலைவு காரணமாக மாநில அரசின் நிதி நிலைமை மோசமாகி, மாநில வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வும், அதனால் ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வும் தமிழகத்தின் வளர்ச்சியை மேலும் பாதிப்பதோடு தனிநபரின் செலவுகளும் எல்லையில்லாமல் போய் விடும் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது.
நாங்களே செய்வோம்
மக்களை மோசமாகவும், மாநில வளர்ச்சியை ஒட்டுமொத்தமாகவும் பாதிக்கும் இந்த பெட்ரோல், டீசல் வரி உயர்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்படித் திரும்பப் பெறவில்லை என்றால் வருகின்ற நிதிநிலை அறிக்கையில் இந்த வரியை குறைப்பதற்கான திருத்தத்தை திராவிட முன்னேற்றக் கழகமே சட்டமன்றத்தில் கொண்டு வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் தமிழக அரசு தான். தமிழகத்தில் வாட் வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தாங்கும் அளவிற்கு தான் பொதுமக்கள் மீது சுமை ஏற்றப்பட வேண்டும். இன்று அதிகளவு ஏற்றப்பட்டு உள்ளது எனக் கூறியுள்ளார்.
திருநாவுக்கரசர்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்:
பெட்ரோல், டீசல் உயர்வால் மக்களின் அத்யாவசிய பொருட்களின் விலை உயரும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பகல் கொள்ளை- ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பெட்ரோல், டீசல் மீதான வாட் உயர்வு பகல் கொள்ளையை விட பயங்கரமானது. பெட்ரோல் மீதான வாட் வரி 34% ஆக உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் மராட்டியத்துக்கு அடுத்தபடியாக அதிக வாட் வரி வசூலிக்கும் மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் பெற்றிருக்கிறது. கடந்த காலங்களில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தும் போதெல்லாம் ஜெயலலிதா கண்டனம் தெரிவிப்பார்.
முதல்வர் விளக்கம் தர வேண்டும்
அப்போது,‘‘மிக அதிக அளவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டதன் காரணமாக சரக்கு கட்டணங்கள் அதிகரிக்கும். அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும். அதிகரித்து வரும் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிப்படையும்'' என்று ஜெயலலிதா கூறுவது வாடிக்கை. இப்போது தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்படுவார்களா... இல்லையா? என்பதை முதலமைச்சர் பழனிச்சாமி விளக்க வேண்டும்.
வாபஸ் பெற வேண்டும்
பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டிருப்பதால் ஏழை, எளிய மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு வரி உயர்வை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.