விகடன் குழுமத் தலைவர் பாலசுப்ரமணியன் உடலுக்கு பல்துறைப் பிரபலங்கள் அஞ்சலி
சென்னை: சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான விகடன் குழுமத் தலைவர் எஸ். பாலசுப்ரமணியன் உடலுக்கு பல்வேறு துறை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
79 வயதாகிய பாலசுப்ரமணியன் கடந்த வெள்ளிகிழமையன்று இரவு மாரடைப்பினால் காலமானார்.
மருத்துவம் படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தனது உடலை தானம் தரவேண்டும் என்ற அவரது விருப்பத்தின்படி அவரது உடல் இன்று தானமாக அளிக்கப்பட உள்ளது.
அதற்கு முன் இறுதி அஞ்சலிக்காக அவருடைய உடல் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து, ஏ1 டிவோலி அப்பார்ட்மெண்ட், எண். 11, கஸ்தூரி எஸ்டேட், போயஸ் கார்டன், தேனாம்பேட்டை, சென்னை-18 என்ற முகவரியில் உள்ள குடியிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அவரின் பூத உடலுக்கு பல்வேறு துறையை சேர்ந்த பிரமுகர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
எழுத்தாளர் சுபா, பாரதி கிருஷ்ணகுமார், சு.வெங்கடேசன், ஆறாம்திணை சிவராமன், நக்கீரன் கோபால், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், பங்குச்சந்தை நிபுணர்கள் நாகப்பன் மற்றும் புகழேந்தி, கவிஞர் வைரமுத்து, நடிகர் சிவகுமார், சூர்யா, சூரி, கிரேசி மோகன், தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன், பிரமிட் நடராஜன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.