அரசின் அலட்சியத்தால் மாற்றுத் திறனாளி மரணம்: இடதுசாரிகள் கடும் கண்டனம்
சென்னை: அரசின் அலட்சியப் போக்கினால் மாற்றுத்திறனாளி மரணம் அடைந்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாமல், தமிழக அரசு அடக்குமுறையை ஏவி விட்டதோடு, விடிய விடிய திறந்த வெளியில் அடைத்து வைத்தது ஏன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசிடம் கோரிக்கைகளை முன் வைத்து போராடி வரும் மாற்றுத்திறனாளிகளை காவல்துறை கைது செய்து சென்னை எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் அடைத்துள்ளனர்.
இவர்களில், குப்புசாமி 67 என்பவர் மாற்றுத்திறனாளியின் பாதுகாவலராக வந்தவர் 17-02-2016 அன்று இரவு 7 மணிக்கு கைது செய்து வைத்துள்ள இடத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக இராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

மரணமடைந்த குப்புசாமி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த மாதனூர் ஆத்தோரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். இதேபோன்று கைது செய்யப்பட்டுள்ள சின்ன சேலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி இராஜாராம் , 40 என்பவர் மயக்கமடைந்த நிலையில் இராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பிப்ரவரி 8.9 ஆகிய இரு நாட்கள் போராட்டத்தை நடத்தினர். அவர்கள் மீது காவல்துறை பலப்பிரயோகம் செய்து அடக்கியது. தமிழக அரசு அப்போதும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

நேற்றைய தினம் மீண்டும் அவர்கள் போராடியபோது காவல்துறை கைது செய்துள்ளது. தங்களது சொந்த நடமாட்டத்திற்கே மற்றவர்களை சார்ந்து இருக்கும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகள் மீது பேச்சுவார்த்தை நடத்திட மறுப்பது ஜனநாயக விரோத போக்கு மட்டுமல்ல, மனிதாபிமானமற்ற செயலாகும். மாநில அரசின் அலட்சியத்தால் உயிரிழப்புகளும், இதர பாதிப்புகளும் அவர்களுக்கு ஏற்படுகிறது.
மாநில அரசின் இச்செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன், மாற்றுத்திறனாளிகளின் சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திட தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. மேலும் மரணமடைந்த குப்புசாமியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிட மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.

காட்பாடி குப்புசாமி மரணமடைந்தது பற்றி கருத்து கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், போராடும் மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாமல், தமிழக அரசு அடக்குமுறையை ஏவி விட்டதோடு, விடிய விடிய திறந்த வெளியில் அடைத்து வைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகள் மீது பேச்சுவார்த்தை நடத்திட மறுப்பது ஜனநாயக விரோத போக்கு மட்டுமல்ல, மனிதாபிமானமற்ற செயலாகும். மாநில அரசின் அலட்சியத்தால் உயிரிழப்புகளும், இதர பாதிப்புகளும் அவர்களுக்கு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளை உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டுமெனவும், முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications