திமுக அணிக்கு போகலாம்.. இடதுசாரி கட்சிகளின் நிர்வாகிகள் முழு ஆதரவு!
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுகவுடனான உறவு முறிந்து போன நிலையில் திமுக அணிக்கு போகலாம் என்று இடதுசாரி கட்சிகளின் நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை அதிமுக அணியில் இணைந்தன. தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத போதும் இதர இடதுசாரிகளான பார்வார்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சிகளும் அதிமுக அணியில் நீடித்தன.
ஆனால் அத்தனை இடதுசாரிகளுக்குமே சேர்த்து 2 சீட்தான் என்று அதிமுக திட்டவட்டமாக கூறியது. இதை ஏற்க இடதுசாரிகள் மறுத்தனர். அதனால் 'நண்பர்களாக சேர்ந்தோம்.. நண்பர்களாக மகிழ்வோடு பிரிவோம்" என்று அதிமுக கூறிவிட்டது. இதை வெளியில் சொன்னால் வெட்கம் என்று கருதிய இடதுசாரிகள் நேற்று ஆலோசனைக் கூட்டம் கூட்டினர்.
இதில் அனைத்து இடதுசாரி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அண்ணா திமுகவால் அவமானப்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டிப் பேசிய பலரும் அந்த அணி இல்லை எனில் எதிர் அணிக்குப் போவோம்.. திமுக பக்கம் போவோம் என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

அப்போது சிலர் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பதால் எப்படி திமுக பக்கம் போக முடியும்? என்று கேள்வி கேட்டிருக்கின்றனர். அப்படிப்பார்த்தால் ஜெயலலிதா மீதும் சொத்து குவிப்பு வழக்கும் நிலுவையில் இருக்கிறது என்று சிலர் பதில் கூறியிருக்கின்றனர். ஒருவழியாக அதிமுக அணியில் இருந்து விலகுவது என்று மட்டும் முடிவெடுத்து அறிவித்தனர் இடதுசாரிகள்.
இடதுசாரிகளின் அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் திமுக தலைவர் கருணாநிதி, திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு இடதுசாரிகள் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று இன்று கருணாநிதியை இடதுசாரித் தலைவர்கள் சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications