'அம்மா'வின் கொடநாடு எஸ்டேட்டில் அட்டூழியம் செய்த பெண் சிறுத்தை சிக்கியது
நீலகிரி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் சுற்றித் திரிந்த 4 வயது பெண் சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஓய்வு எடுக்க வேண்டும் என்றால் கொடநாடு எஸ்டேட்டுக்கு தான் செல்வார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஜெயலலிதாவின் பங்களா அருகே 4 வயது பெண் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்தது. அது அப்பகுதியில் உள்ள சில ஆடுகளை அடித்துக் கொன்றுள்ளது.
இது குறித்து அங்கு வசிக்கும் மக்கள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் ஜெயலலிதாவின் பங்களா மற்றும் காட்டுப் பகுதியை ஒட்டியுள்ள 2 இடங்களில் கூண்டுகள் மற்றும் கேமராக்களை வைத்தனர். சிறுத்தையை பிடிக்க கூண்டுகளில் 2 ஆடுகள் மற்றும் 1 நாயை பொறியாக வைத்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை பங்களா அருகே வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது. பிடிபட்ட சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் பவானி காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்று அங்கு விட்டனர்.
சிறுத்தை பிடிபட்டதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.