வால்பாறை: தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிறுத்தை குட்டி பலி
வால்பாறை: வால்பாறை அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த 6 மாத ஆண் சிறுத்தைக் குட்டி பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ளது மாணிக்கா -செங்குத்துப்பாறை எஸ்டேட். இங்குள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதியின் மத்தியில், குடிநீர் விநியோகம் செய்வதற்காக தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. அதற்குள் எதுவும் விழாமல் தடுப்பதற்காக வலை கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் சுற்றித் திரிந்த 6 மாத ஆண் சிறுத்தை குட்டி குடிநீர் தொட்டி மேல் போடப்பட்டிருந்த வலை மீது ஏறியுள்ளது. சிறுத்தையின் எடை தாங்காமல் வலை அறுந்து விழுந்தது. இதனால் சிறுத்தைக் குட்டி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து மானாம் பள்ளி வனச்சரகர் சேகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் வன ஊழியர்கள் விரைந்து வந்து சிறுத்தை குட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.