ஜெ. விடுதலை... மக்களும் ஹேப்பி அண்ணாச்சி... வன்முறை பீதி நீங்கி இயல்பு நிலை திரும்பியதால்!
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. ஜெயலலிதாவை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டதால், வன்முறை பயம் நீங்கி மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு மீது, இன்று காலை கர்நாடகா ஹைகோர்ட்டில் தீர்ப்பு வழங்கப் பட்டது. ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் வழக்கு இது என்பதாலும், தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பினாலும் இந்தத் தீர்ப்பு தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இது ஒருபுறம் இருக்க, தீர்ப்பு ஜெயலலிதாவிற்கு பாதகமாக வந்தால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் அசம்பாவித செயல்களில் ஈடுபடலாம் என்ற பதட்டம் மக்கள் மனதில் இருந்தது. அமைதி காக்கவும் என ஜெயலலிதா மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இருந்தாலும், சில பாசக்காரத் தொண்டர்கள் கலவரங்களில் ஈடுபடலாம் என மக்கள் அஞ்சினர்.
அசம்பாவிதங்களைத் தடுக்க போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தாலும், மக்களும் தங்களால் இயன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
வெறிசோடிய பேருந்து நிலையங்கள்...
அதன்படி, வெளியூருக்குப் போயிருந்த மக்கள் பலர் முன்கூட்டியே தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றே சென்னை திரும்பி விட்டனர். இதனால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் குறைவாகக் காணப்படுகிறது.
விடுமுறை...
அதேபோல், அலுவலகம் செல்லும் பலரும் இன்று விடுமுறை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 மணிக்குத் தான் தீர்ப்பு வழங்கப் படுகிறது. எனவே, காலையில் பத்திரமாக அலுவலகம் வந்து சேர்ந்தாலும், மாலையில் சூழ்நிலை எப்படி இருக்குமோ என இவர்கள் அஞ்சினர்.
குறைவான பயணிகள்...
இதனால், பேருந்து மற்றும் ரயில்களில் அலுவலகம் செல்வோரின் கூட்டமும் இன்று குறைந்துள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பெரும்பாலான இடங்களில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
வீட்டிற்குள்ளே முடக்கம்...
திரையரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காவிலும் இன்று கூட்டம் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. பெரும்பாலானோர் அலுவலகத்திற்கு விடுப்பு போட்டு விட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.
மந்தம்...
இதனால், சென்னை நகரம் வழக்கமான திங்கட்கிழமை காலைக்குரிய பரபரப்புகள் எதுவுமின்றி மந்தமாகவேக் காணப்பட்டது.
அலைமோதிய கூட்டம்...
மேலும் மாலையில் கடைகள் அடைக்கப்படலாம் என்ற பயத்தில் இருந்ததால், கடைகளில் காலையிலேயே பால், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் மக்கள் அவசரம் காட்டியதைக் காண முடிந்தது. மேலும் பலர் வெளியூர் பயணங்களையும் கூட தள்ளிப் போட்டனர்.
சட்டென மாறிய காட்சிகள்...
இந்நிலையில், ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வன்முறைகள் ஏதும் நிகழ வாய்ப்பில்லை என மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனால், மீண்டும் அவர்கள் தங்களது பணிகளைத் தொடர ஆரம்பித்துள்ளனர். எனவே, காலையில் மந்தமாக காணப்பட்ட போக்குவரத்து தற்போது அதிகரித்துள்ளது.